Thursday, 15 September 2011

சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 1 )

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

--------------
Please Note:
சீன பெயர்களின் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் தவறுகள் இருக்கலாம். சுட்டி காட்டப்படும்பட்சத்தில் தவறுகள் திருத்தப்படும்.
--------------

நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

பல ஆவணங்களை முன்வைத்து தன்னுடைய வாதத்தை வைத்தார் அவர். ஆனால் அவருடைய கோட்பாடு மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் அவர் போன்ற துறைச்சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது.

ஷெங் ஹி என்ற சீன முஸ்லிம் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ இல்லையோ, அவர் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீன முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை, ஆச்சர்யமூட்டுபவை. தங்களின் வசிப்பிடத்தால், அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு இருந்தாலும், கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக பல தடைகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்திருக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).

சீன முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையை, அவர்களின் தற்போதைய நிலையை ஆராய முற்படுவதே இந்த பதிவுகள். இன்ஷா அல்லாஹ்.

சீன இனங்கள்:

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள்.

உய்குர் இன மக்கள் (வீகுர் எனவும் உச்சரிக்கப்படுகின்றது) அதிகமாக வாழும் பகுதி சின்ஜிஅங் உய்கூர் தன்னாட்சி பகுதி (Xinjiang Uyghur Autonomous Region) என்று அழைக்கப்படுகின்றது. அது போல, ஹுய் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி நின்க்சியா ஹுய் தன்னாட்சி பகுதி என்றழைக்கப்படுகின்றது (Ningxia Hui Autonomous region).


உய்குர் இன மக்கள்:

சீன முஸ்லிம்கள் குறித்து பேசும் போது பலரும் எதிர்ப்பார்க்கக்கூடிய முதல் தகவல் சின்ஜிஅங் பகுதி குறித்தே இருக்கும். இந்த பகுதி கடந்த சில வருடங்களாக ஊடங்களில் அதிகம் வலம் வருகின்றது. அங்கு நடக்கும் கலவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.

இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% - 7.5%-மாக இருக்கின்றது.

சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

ஆம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய சின்ஜிஅங் பகுதி, சீனாவின் நிலப்பரப்பில் பதினாறு சதவிதத்தை கொண்டது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், பிரிவினைவாதிகளுக்கு இணங்கி இந்த பகுதிக்கு சீனா சுதந்திரத்தை வழங்கினால் தன் நிலப்பரப்பில் கணிசமான அளவை அது இழக்க வேண்டிவரும்.

இங்குள்ள உய்குர் இனத்தவரின் எண்ணிக்கை 45%. இந்த பகுதியில் உள்ள மற்ற முஸ்லிம் இனத்தவரையும் சேர்த்தால், சின்ஜிஅங் பகுதியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் முஸ்லிம்கள். மீதம் இருப்பவர்கள் ஹன் இன சீன மக்கள்.



தமிழ் பேசுவதால் நாம் தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போல, உய்குர் மொழி பேசுவதால் இவர்கள் உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை கையெழுத்து படிவமாக (Script) கொண்ட மொழியாகும்.

உய்குர் இனத்தவரை பொறுத்தவரை, இவர்கள் மதத்தால், கலாச்சாரத்தால், மொழியால் ஹன் இனத்தவரிடமிருந்து (இவர்கள் மாண்டரின் மொழி பேசுபவர்கள்) வேறுபட்டவர்கள். உய்குர் இனத்தவரின் முன்னோர்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்கள்.

எப்படி ரஷ்யாவிற்கு ஒரு செசன்யாவோ (பார்க்க <<செசன்யா - என்ன தான் பிரச்சனை?>>) அது போல தான் சீனாவிற்கு சின்ஜிஅங். எப்படி ரஷ்யாவால் செசன்யாவை விட்டு கொடுக்க முடியாதோ அது போல சீனாவினாலும் சின்ஜிஅங்கை விட்டு கொடுக்க முடியாது. எண்ணை, இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இந்த பகுதியில் மிகுந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.

1949-ஆம் ஆண்டுக்கு முன், சின்ஜிஅங்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவின் உதவிக்கொண்டு தங்களை குடியரசாக அறிவித்து கொண்டார்கள் உய்குர் இன மக்கள். அந்த குடியரசின் பெயர் கிழக்கு துர்கெஸ்தான் (East Turkestan). அந்த ஆண்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இந்த பகுதியை மீண்டும் பிடித்தது. இதனை தன்னாட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கிருந்த ஹன் இன மக்களின் எண்ணிக்கை ஆறு சதவிதம் மட்டுமே. உய்குர் இன மக்களோ 80-90% இருந்தனர். இன்றோ ஹன் இனத்தவர் 40% இருக்கின்றார்கள், உய்குர் இனத்தவரோ 45% இருக்கின்றார்கள்.

இது எப்படி சாத்தியம்?

இந்த பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை நீர்த்துப்போக செய்ய அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது சீன அரசு என்பது உய்குர் மக்களின் குற்றச்சாட்டாகும்.

ஆனால் சீன அரசு இதனை மறுக்கின்றது. இயற்கை வளங்கள் அதிகம் வாய்ந்த சின்ஜிஅங்கில், பொருளாதார நடவடிக்கைகள் பெருகும்போது, இயல்பாகவே, மற்ற இடங்களில் வசிக்கும் ஹன் இன சீன மக்கள் அந்த பகுதியை நோக்கி நகர்வது வாடிக்கையானது தான் என்பது சீன அரசின் வாதமாக இருக்கின்றது.

சீன அரசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும் அதே நேரத்தில், நாம் மற்றொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். உய்குர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி சின்ஜிஅங். இவர்கள் அறிந்ததெல்லாம் தங்களுடைய தாய்மொழியும், அரபியும் மட்டுமே. அப்படியிருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மாண்டரின் (சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி) மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

(இதுமட்டுமல்லாமல், 2002-ஆம் ஆண்டு, சின்ஜிஅங் பல்கலைகழகத்தில் உய்குர் மொழி பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்தது அரசு)

இதனால், இயல்பாகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் உய்குர் இன மக்கள். தங்களுடைய பொருளாதார வாய்ப்புகள் ஹன் இனத்தவருக்கு போகின்றன என்பது உய்குர் இனத்தவரின் நீண்ட கால ஆதங்கமாக இருக்கின்றது. சின்ஜிஅங் பகுதியை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாக புரியக்கூடிய விஷயம் இது.

பல ஆண்டுகளாக பனிப்போராக நீடித்து வந்த உய்குர்-ஹன் இனத்தவருக்குள்ளான பிரச்சனையின் வெளிப்பாடே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரமான இனக்கலவரங்கள் (July, 2009). இதில் சுமார் 156 பேர் இறந்தார்கள், 800-ருக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இந்த கலவரத்திற்கு பிரிவினைவாதிகளே காரணமென சீன அரசு குற்றஞ்சாட்டியது. சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1400 பேர் கைது செய்யப்பட, தங்களின் கணவர்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதாக கூறி பெண்கள் போராட்டங்களில் குதிக்க, பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.



பிரிவினைவாதம் குறித்து பேசும்போது சில சுவாரசிய செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. சின்ஜிஅங்கில் சுதந்திர கோஷம் கேட்பதென்பது அறுபது ஆண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால், 2001-க்கு பிறகு இதில் முக்கிய திருப்புமுனையாக, இந்த பிரிவினைவாதத்தை பயங்கரவாதத்தோடு (அதிகளவில்) தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்தது சீன அரசு. தன்னுடைய சின்ஜிஅங் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தை காரணம் காட்டி உலகளவில் ஆதரவை தேட ஆரம்பித்தது சீனா.

ஆனால் சீனாவின் இத்தகைய அணுகுமுறையை கடுமையாக கண்டித்தன மனித உரிமை இயக்கங்கள். தீவிரவாதத்தின் மீதான நடவடிக்கை என்று கூறி உய்குர் இனத்தவர் மீதான தங்களது அடக்குமுறையை அதிகரிக்கப்பார்க்கின்றது சீன அரசு என அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை, உய்குர் இன மக்களின் மத நம்பிக்கைகள் மீதான சீன அரசின் அடக்குமுறை. வேலை நாட்களில் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு.

நிச்சயமாக சீன அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வினோதமானவை. ஏனென்றால், கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளது சீன அரசாங்கம் (இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் இவற்றை பார்ப்போம்). பலவிதத்திலும் முஸ்லிம்களுக்கு உதவியாக இருந்துள்ளது சீன அரசு. அப்படியிருந்தவர்கள் இன்று இப்படி செயல்பட என்ன காரணம்? மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.



தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், "தனி நாடு" கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை.

இப்போது இவர்களுக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், சீன அரசின் நடவடிக்கைகளால் தங்களின் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ என்பது தான்.

பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம்,

  • உய்குர் மொழியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
  • அதன் மூலமாக இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது,
  • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர் இனத்தவர் மீது நடத்தும் அடக்குமுறையை கைவிடுவது,
  • மத நம்பிக்கைகள் மீதான தன்னுடைய அதிகாரத்தை கைவிடுவது,
  • உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.

ஆக, இவை தான் சின்ஜிஅங் பிரச்சனையின் முக்கிய சாரம்சங்கள். அப்பகுதியில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவத்தின் மூலம் நிரந்தர அமைதி திரும்பலாம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்:

உய்குர்களுக்கும், ஹன் இனத்தவருக்குமிடையே பல வேறுபாடுகள் என்றால், ஹுய் இனத்தவருக்கும் ஹன் இனத்தவருக்குமிடையே (பெரிய அளவில்) ஒரு வேறுபாடும் கிடையாது.

ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். இவர்களுக்குள்ளான (வெளிப்படையாக தெரியும்) வித்தியாசங்கள் என்றால், அது, ஹுய் இனத்தவர்,

  • பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள்,
  • மதுவை விலக்குவார்கள்,
  • பெண்கள் ஹிஜாப் அணிவார்கள்

என்பன போன்றவை தான்.

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.

யார் இந்த ஹுய் இனத்தவர்?

இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும். இது குறித்த தகவல்கள், மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த பொதுவான சில சுவாரசிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

No comments: